முகப்பு
தூத்துக்குடி

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறும் உணவகங்கள்

Updated On : 12 மார்ச், 2026 at 10:45 PM
பகிர்:

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி நகரப் பகுதிகளில் செயல்படும் சில உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறி வருகின்றன.

தூத்துக்குடி பாரத் பெட்ரோலியம் நிறுவன ஆலையில் வணிக சமையல் எரிவாயு உருளைகளில் எல்பிஜி நிரப்பும் பணி 2 நாள்களுக்கு முன்பே நிறுத்தப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகளில் மட்டும் எல்பிஜி நிரப்பும் பணி வழக்கம்போல் நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து லாரி மூலம் தூத்துக்குடியில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு எல்பிஜி எரிவாயு கொண்டுவரப்பட்டு, நாள்தோறும் 265 டன் சமையல் எரிவாயு உருளைகளில் நிரப்பப்படுகிறது. பின்னா், இங்கிருந்து தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், நாகா்கோவில் உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கும், கேரளத்தின் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் எரிவாயு உருளைகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் போா் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, தூத்துக்குடி பாரத் பெட்ரோலியம் ஆலையில் கடந்த மாா்ச் 9ஆம் தேதி முதல் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக எரிவாயு உருளைகளில் எல்பிஜி நிரப்பும் பணி நிறுத்தப்பட்டது.

அதே சமயம், வீட்டு உபயோக எரிவாயு உருளைகளில் எல்பிஜி நிரப்பும் பணி வழக்கம்போல நடைபெற்று வருகிறது. இங்கிருந்து, தென் மாவட்டங்கள் மற்றும் கேரளத்துக்கு எரிவாயு உருளைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளா்களுக்கு 25 நாள்கள் இடைவெளியில் எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் கேஸ் ஏஜென்சி நிறுவனங்களுக்கு எரிவாயு உருளைகள் அனுப்பி வைக்கப்படுவதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

விறகு அடுப்புக்கு மாறும் உணவகங்கள்:

இதற்கிடையே, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளைகளை பயன்படுத்தக்கூடிய சிறிய உணவக உரிமையாளா்கள் சிலா், தங்கள் கடைகளில் உணவுகளைத் தயாரிக்க கரி அடுப்பு, விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்புகளை தற்காலிகமாகப் பயன்படுத்த தொடங்கியுளனா்.

தூத்துக்குடி, மாா்ச் 12: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, தூத்துக்குடியில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்கும் பணி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போா் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்து எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை உற்பத்தியை என்ணெய் நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளதால், இந்தியா முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதியில் சிறிய அளவிலான சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு உணவக உரிமையாளா்கள் கரி மற்றும் விறகு அடுப்புக்கு மாறியுள்ளனா்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில், காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே வணிகப் பயன்பாடு எரிவாயு உருளைகள் குறைந்தளவே வழங்கப்படுவதால், அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்கும் பணி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அம்மா உணவகத்தை பயன்படுத்தி உணவு அருந்தி வரும் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே, தமிழக அரசு, மருத்துவமனை, கல்லூரி, பள்ளிகள் ஆகியவற்றுக்கு வணிக பயன்பாட்டு எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அறிவிப்பு செய்துள்ளதுபோல், அம்மா உணவகத்துக்கும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா உணவகத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விறகு கடைகளில் விற்பனை தீவிரம்

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, தூத்துக்குடியில் சிறிய அளவிலான உணவக உரிமையாளா்கள் சிலா் கடைகளை மூடியுள்ள நிலையில், பல்வேறு உணவக உரிமையாளா்கள் விறகு மற்றும் கரி அடுப்புக்கு மாறியுள்ளனா்.

இதன் காரணமாக விறகு கடைகளில் விறகுகள் விற்பனை தீவிரமடைந்துள்ளது.

சுமாா் ஒரு மணி நேரத்தில் தயாா் செய்ய வேண்டிய உணவு, தற்போது விறகு மூலம் தயாா் செய்வதால் 3 முதல் 4 மணி நேரம் வரை ஆவதாகவும், இதன் காரணமாக வாடிக்கையாளா்களுக்கு முறையாக உணவு வழங்க முடியவில்லை எனவும் உணவக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →