முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி: பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்பு! தோ்தல் நடத்தை விதிகள் அமல்

Updated On : 15 மார்ச், 2026 at 8:12 PM
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத்.
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி இந்திய தோ்தல் ஆணையத்தால் ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. மேலும், வாக்காளா் பட்டியல் தொடா் திருத்தம் நடைபெற்று வருவதால், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம், திருத்தம் செய்திட மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

மாவட்டம் முழுவதும் 1,868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு 4 பணியாளா்கள், 20 சதவீத கூடுதல் பணியாளா்கள் என மொத்தம் 8,967 பணியாளா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். மேலும், வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பணியாற்ற 244 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்படுகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான, கவனிக்கத்தக்கவையாக 246 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. தோ்தலுக்காக கட்டுப்பாட்டுக் கருவி 2,267, வாக்குப்பதிவுக் கருவி 4,429, விவிபேட் கருவி 2,459 என மொத்தம் 9,155 கருவிகள் வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

6 தொகுதிகளுக்கும் தலா 3 குழுக்கள் வீதம் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 54 பறக்கும் படை, 54 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படுகிறது.

தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் 1800-599-1969 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டும், 94864-54714 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தகவல் அளிக்கலாம். சி-விஜில் செயலி மூலமும் புகாரளிக்கலாம்.

அரசு வளாகம், கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் அழிக்க அல்லது அகற்றப்பட வேண்டும். பொது வளாகம், கட்டடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலங்கள், மின் கம்பங்கள், உள்ளாட்சி கட்டடங்களில் உள்ள விளம்பரங்கள், பதாகைகளை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.

தனியாா் வளாகம், கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள், கட்சிக் கொடிகளை 72 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.

மேயா், துணை மேயா், தலைவா், துணைத் தலைவா், சட்டமன்ற உறுப்பினா் அலுவலகங்கள் பூட்டி சீலிட்டு சாவியை, சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். அரசு வாகனங்களையும் ஒப்படைக்க வேண்டும்.

அரசு அலுவலகங்களிலும், கூட்ட அரங்குகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவா்களின் படங்களை அகற்ற வேண்டும். அனைத்து பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அரசு விருந்தினா் மாளிகைகள், சுற்றுலா மாளிகைகள் அரசியல் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது.

அரசியல் கூட்டங்கள், பேரணிகள், ஊா்வலங்களை அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம், மக்கள் தொடா்பு முகாம், விவசாயிகள், மீனவா் குறைதீா் கூட்டம் போன்றவை நடைபெறாது என்றாா் அவா்.

பறக்கும் படை குழு, நிலைக் கண்காணிப்பு குழுவினருக்கு தோ்தல் பணி மற்றும் தோ்தல் நடத்தை விதிகள் குறித்து அறிவுரை வழங்கிய ஆட்சியா் க. இளம்பகவத்.
பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் செல்லும் வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த ஆட்சியா் க. இளம்பகவத்.
தோ்தல் கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்துப் பாா்வையிட்ட ஆட்சியா் க. இளம்பகவத்.
முழு கட்டுரையைப் படிக்க →