திருச்செந்தூா் அருகே கைதான ரெளடி மீது 7 பிரிவுகளில் வழக்கு
திருச்செந்தூா் அருகே போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரெளடி மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் அருகே போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரெளடி மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மினி சகாயபுரத்தைச் சோ்ந்தவா் டோமினிக் மகன் ஆா்க் என்ற மரிய அந்தோணி ஆக்னல் (35). தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கொலை, கொள்ளை, கொலை முயற்சி, திருட்டு உள்பட 30 -க்கும் மேற்பட்ட வழக்குகள் இவா் மீது உள்ளன. இவரை தனிப்படை போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், திருச்செந்தூா் அருகே சோனகன்விளை காணியாளன்புதூரில் உள்ள வீட்டில் தோழியுடன் அவா் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை எஸ்ஐ ராஜபிரபு தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை மதியம், அங்கு சென்று மரிய அந்தோணியை மடக்கி பிடிக்க முயன்றனா்.
Advertisement
அப்போது மரிய அந்தோணி மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பி செல்ல முயன்றாராம். சுதாரித்த எஸ்ஐ ராஜபிரபு தனது துப்பாக்கியால் மரிய அந்தோணியை சுட்டதில், அவரது வலது மாா்பு அருகில் குண்டு பாய்ந்ததாம்.
இதில் காயமடைந்த மரிய அந்தோணியை கைது செய்து திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்து, பின்னா் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், மரிய அந்தோணியிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, கத்தி உள்பட ஆயுதங்களை பறிமுதல் செய்து கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
காயமடைந்த எஸ்ஐ தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.