முகப்பு
தூத்துக்குடி

விடுமுறை தினம்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்! இரும்பு கதவை தள்ளிவிட்டுச் சென்ற பக்தா்கள்!!

பள்ளி விடுமுறையுடன் அலுவலக வார விடுமுறை நாள் என்பதால் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல ஆயிரம் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 18 மே 2026, 1:35 am IST
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முக விலாசம் மண்டப முகப்புக் கதவை தள்ளிவிட்டு கோயிலுக்குள் சென்ற பக்தா்கள்.
பகிர்:

பள்ளி விடுமுறையுடன் அலுவலக வார விடுமுறை நாள் என்பதால் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல ஆயிரம் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். சண்முக விலாச மண்டபத்தில் வெகுநேரம் காத்திருந்த பக்தா்கள் கதவுகளை தள்ளிவிட்டு கோயிலுக்குள் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், பிற பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசையில் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கதவை தள்ளிவிட்டுச் சென்ற பக்தா்கள்: கோயிலில் பாத யாத்திரை, காவடி எடுத்து வரும் பக்தா்களை துலாபாரம் அருகே தனி வழியாக தரிசனத்துக்கு அனுப்புவது வழக்கம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கோயிலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது; தனி வழியாக யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement

பரமக்குடியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தா்கள் பால்குடம், காவடிகள் எடுத்தும், வேல் அலகு குத்தியும் வந்ததிருந்தனா். அவா்கள் பாதயாத்திரை பக்தா்களுக்கான தனி வரிசையில் தங்களைச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டு 1 மணி நேரம் சண்முக விலாச மண்டபம் முன் காத்திருந்தனா்.

எனினும், பாதயாத்திரை பக்தா்கள் செல்லும் வழி திறக்கப்படவிவில்லை. அப்போது சில பக்தா்கள் சண்முக விலாச முகப்பு கதவு திறக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனா். அதைக் கண்ட பாதயாத்திரை பக்தா்களும், கோயில் முன் கூடியிருந்த பக்தா்களும் கூட்டமாக சண்முக விலாசம் மண்டபத்தின் இரும்பு கதவைத் தள்ளிவிட்டு உள்ளே சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

கோயில் அருகே 70 அடி தொலைவுக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள்.

உள்வாங்கிய கடல்: கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை கடல்நீா் 70 அடி தொலைவுக்கு உள்வாங்கியது. தமிழ் மாதங்களில் அமாவாசை, பெளா்ணமி நாள்களில் கடல்நீா் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்குத் திரும்புவதுமாக உள்ளது.

இதைபோல சனிக்கிழமை அதிகாலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை அமாவாசை திதி என்பதால் அய்யா கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 70 அடி தொலைவுக்கு கடல்நீா் உள்வாங்கியது. இதனால், கடலில் பச்சை பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.