முகப்பு
திருச்சி

தேரடித் திடல் பொதுக்கூட்ட மேடை பணிகள் நிறைவு பெறுவது எப்போது?

 மன்னார்குடி, செப். 8: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தேரடி திடலில் நகராட்சிக்குச் சொந்தமான பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் அரசியல், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் 4 ஆண்டுகளாக முழுமைப் பெ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 10:58 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:56 PM

 மன்னார்குடி, செப். 8: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தேரடி திடலில் நகராட்சிக்குச் சொந்தமான பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் அரசியல், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் 4 ஆண்டுகளாக முழுமைப் பெறாமல் உள்ளது.

    மன்னார்குடி நகரின் தேரடித் திடல் பகுதியில் அமைந்துள்ள இந்த மேடையில் பேசாத தேச, மாநில தலைவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அரசியல், ஆன்மிகம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஜாம்பவன்களின் வாழ்க்கை வரலாறு ஏடுகளில் கண்டிப்பாக தேரடித் திடல் மேடை இடம் பெற்று இருக்கும்.

     பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மேடை சேதமடைந்ததால், அந்த கட்டடத்தை இடித்துவிட்டு விசாலமான பொது மேடை அமைக்க அப்போதைய நகர்மன்றத் தலைவர் பழ. மணி தலைமையில் நகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்தது.

Advertisement

   2005-ம் ஆண்டு பொதுமேடை இடிக்கப்பட்டு, அப்போதைய மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக திருவாரூர் மாவட்டச் செயலருமான ஆர். காமராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து | 3 லட்சம் பெறப்பட்டு, புதிய கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டன.

   பின்னர், நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு கூடுதலாக | 2.5 லட்சம் நிதி தேவை என, ஆர். காமராஜ் எம்பியிடம் நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று புதிய நகர்மன்றத் தலைவராக திமுகவை சேர்ந்த த. கார்த்திகா பொறுப்பேற்றார்.

  அதன் பின்னர், சில மாதங்களிலேயே ஆர். காமராஜின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிவடைந்ததால், நிதி ஒதுக்கீடு பெற முடியாத நிலை ஏற்பட்டது.

   இதனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டடப் பணிகள் நடைபெறாமல் உள்ளன. இந்த மேடை.    மேலும், நகராட்சி நிர்வாகம் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதால், இந்தக் கட்டடம் மீண்டும் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பொது மேடை இடிக்கப்பட்ட பின்னர், கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மேடை அருகிலேயே தாற்காலிக மேடை அமைத்து அரசியல், கலை, பொது நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட திமுக பொதுக்கூட்டமும் தாற்காலிக மேடை அமைத்தே நடைபெற்றது.

    கட்டடப் பணியை முழுமையாக முடிக்க நகராட்சி பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுக்கும் போதெல்லாம், அரசிடம் நிதி கேட்டு நகராட்சி நிர்வாகம் கருத்துரு அனுப்பியுள்ளது, விரைவில் கட்டடப் பணி நிறைவு பெறும் என்ற பதில்தான் நகர்மன்றத் தலைவரிடம் இருந்து வருகிறது என்கின்றனர் நகர்மன்ற அதிமுக உறுப்பினர்கள்.

    மேலும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர் ஒதுக்கிய நிதியிலிருந்து கட்டடப் பணி தொடங்கப்பட்டதால், பாதியில் நிற்கும் பணியை தொடங்க நகராட்சி நிதி ஒதுக்கீடு செய்து பணி முடிந்த பின் திறப்பு விழா, கல்வெட்டு ஆகியவற்றில் நிதி வழங்கியவரின் பெயரை போட வேண்டிய நிலை ஏற்படும், இது போன்ற அரசியல் காரணத்தாலேயே  பொது மேடை அமைய நிதி பெற நகராட்சி நிர்வாகம் அக்கறை செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

    கட்டடப் பணிக்கு அரசியல் சாயம் பூசாது வரலாற்றில் இடம் பெற்ற பொது மேடைக்கு நகராட்சி பொது நிதியிலிருந்து தாமதம் இன்றி நிதியை வழங்கி கட்டடப் பணி நிறைவு பெற தேவையான நடவடிக்கையை மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.