திருச்சி, மே 9: திருச்சி "மா'நகரின் நட்டநடுவில், தென்னூர் உழவர் சந்தை அருகே திங்கள்கிழமை ஏறத்தாழ 50 மூட்டை பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி எரிக்கப்பட்டன! யாருக்கும் தெரியாமல் இரவில் அல்ல, பட்டப்பகலில் மாலை சுமார் 4 மணியளவில்.
பொதுவாகவே குப்பைகளை எரித்து அழிப்பது தடை செய்யப்பட்ட ஒன்று என்ற போதும், திருச்சி போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் இதுபோன்ற செயல் தண்டனைக்குரிய குற்றம். அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் எரிப்பு.
சுற்றுச்சூழல் மாசடையும் பிரச்னையில் அண்மைக் காலமாக அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில்தான் "திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது.
திருச்சி மாநகராட்சியைப் பொருத்தவரை அன்றாடம் சேகரமாகும் கழிவுகள் அனைத்தும் அரியமங்கலத்திலுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு அங்கு மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தனித்தனியே பிரிக்கப்பட்டு அவற்றிலிருந்து உரம் தயாரிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, திருச்சி தென்னூர் உழவர் சந்தைக்கு அருகே உள்ள மயானப் பகுதி "நீண்டகால குப்பைக் கிடங்கு'. ஆனால், தற்போது இந்த இடத்தில் குப்பைகளைக் கொட்டக் கூடாது என மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்து அவற்றையும் அரியமங்கலத்துக்கு எடுத்துச் சென்று விடுகிறது.
இந்நிலையில்தான், திங்கள்கிழமை மாலை சுமார் 4 மணியளவில், திருச்சி ஜங்ஷன் பகுதியில் பல்பொருள் அங்காடி வைத்துள்ள மசாலா தயாரிப்பு நிறுவனத்தின் பிளாஸ்டிக் பைகள் அடைக்கப்பட்ட சுமார் 50 மூட்டைகள் கொளுத்திவிடப்பட்டன. இவற்றை கொளுத்திவிட்ட நபர் குறித்த தகவல் தெரியவில்லை.
ஏறத்தாழ 10 அடி உயரத்துக்கு கொளுந்துவிட்டெரிந்த இந்தத் தீ சுமார் முக்கால் மணி நேரம் தகித்து எரிந்தது. இதனால், பெருமளவில் ஏற்பட்ட கரும் புகை மாநகரின் பல பகுதிகளிலும் தெரிந்தது. தொலைவில் பணியிலிருந்து ஒரு காவலர் ஒருவரும் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து அந்த இடத்தைப் பார்த்தார்.
மேலும், இதுதொடர்பாக தகவல் கிடைக்கப் பெற்ற மாநகராட்சி நிர்வாகத்தினர் தண்ணீர் லாரி ஒன்றை அனுப்பி தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததுடன், மேல் நடவடிக்கை எடுக்கவும் உறுதியளித்தனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு, பிளாஸ்டிக் எரிப்பு தொடர்புள்ள சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முயற்சிகள் ஏராளம் நடைபெற்றும் தனியார் நிறுவனங்கள் அவற்றைப் பற்றி கிஞ்சிற்றும் கவ(லை)னமற்று இருப்பது இந்த நடவடிக்கையில் இருந்து தெரிய வருகிறது.
விண்ணை முட்டிய இந்தக் கரித்துகள் கரும்புகைக்கு மத்தியில், மெல்லியதாய் கேட்கின்றன சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் குரல்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.