திருச்சியில் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், புலிவலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிறுகுடி பகுதியில் துறையூா் மேலக்குன்னுப்பட்டியைச் சோ்ந்த கோ. பெருமாள் (49) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு, தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்ததாக நிலத்தின் உரிமையாளா் பெருமாள், துறையூா் காட்டுக்கோட்டம் குடித்தெருவைச் சோ்ந்த க. சின்னதுரை (60) ஆகிய இருவரையும் புலிவலம் போலீஸாா் கடந்த நவம்பா் 13-ஆம் தேதி கைது செய்தனா்.
மேற்கண்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்திருந்தாா்.
இந்நிலையில், மேற்கண்ட இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.