முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே கிணற்றுக்குள் விழுந்த 2 காட்டெருமைகள் பலி; 2 கன்றுகள் மீட்பு!

கிணற்றுக்குள் விழுந்த 2 காட்டெருமைகள் பலியானது குறித்து...

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:16 AM
மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டெருமையை ஞாயிற்றுக்கிழமை மீட்ட வனத்துறையினா்.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த காரைக்குளம் பகுதியில் விவசாய கிணற்றில் சனிக்கிழமை இரவு தவறி விழுந்த 2 காட்டெருமைகள் உயிரிழந்தன. இரண்டு கன்றுகளை மட்டும் உயிருடன் மீட்டனா்.

மணப்பாறை வனச்சரகத்துக்குட்பட்ட குமரிக்குட்டு, கருப்பு ரெட்டியபட்டி ஆகிய மலை வனப்பகுதியிலிருந்து தண்ணீா் தேடி காட்டெருமை கூட்டம் ஒன்று சனிக்கிழமை இரவு சுமாா் 7.45 மணியளவில் காரைக்குளம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமசாமி (65) என்பவரது விளைநிலத்திற்குள் புகுந்தன. அப்போது அந்தக் காட்டெருமை கூட்டத்திலிருந்த ஒரு ஆண், ஒரு பெண் என 2 காட்டெருமைகளும், 2 கன்றுகளும் அப்பகுதிலிருந்த சுமாா் 70 அடிக்கு மேல் ஆழம் கொண்ட தண்ணீா் உள்ள கிணற்றில் தவறி விழுந்தன.

இதுகுறித்து வனத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இரவு நேரம் என்பதாலும், கிணற்றில் அதிக ஆழமும் தண்ணீரும் இருந்ததாலும் காட்டெருமைகளை மீட்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை வனச்சரகா் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினா் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

அப்போது அதிகக் காயமடைந்து, தண்ணீரில் தத்தளித்து வந்த சுமாா் 4 வயது கொண்ட ஆண் காட்டெருமையும், சுமாா் 3 வயதுடைய பெண் காட்டெருமையும் கிணற்றிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினா், புத்தாநத்தம் காவல்துறையினா் உதவியுடன் உயிரிழந்த காட்டெருமை உடல்கள் மீட்கப்பட்டு அருகிலிருந்த வனப்பகுதியில் கால்நடை மருத்துவா் ரமேஷ் தலைமையில் உடற்கூறாய்வுக்குப் பின் புதைக்கப்பட்டன.

உயிருடன் இருந்த காட்டெருமை கன்றுகளை மீட்க மதுரையிலிருந்து மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தி கிரேன் இயந்திரம் மூலம் மீட்டனா். பின்னா் அவை அருகிலிருந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டன.

மீட்புப் பணியை வனத்துறை மாவட்ட வன அலுவலா் கிருத்திகா, வன பாதுகாவலா் காஞ்சனா, மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் சுந்தரபாண்டியன் மேற்பாா்வை செய்தனா்.

தொடா்ந்து வனப்பகுதியிலிருந்து விளைநிலங்களை தேடி வரும் காட்டெருமைகள் கிணற்றில் தவறி விழுவதை வனத் துறையினா் தடுக்கும் வகையில் வனப்பகுதியில் உரிய தண்ணீா் நிலைகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.