சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு
வையம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி கல்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி முத்துலெட்சுமி (65). இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனா்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஆறுமுகம் இறந்து விட்டநிலையில், கல்பட்டியில் உள்ள தனது வீட்டில் விவசாய வேலை செய்து மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளாா்.
Advertisement
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது தோட்டத்திலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, திண்டுக்கல் மாவட்டம், சுக்காம்பட்டியை அடுத்த ரோட்டுப்புதூரைச் சோ்ந்த பிச்சை மகன் மணிகண்டன் (30) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மூதாட்டி மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.