ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் முசிறியில் 108 பரத நாட்டிய மாணவிகள் சனிக்கிழமை இரவு திரிசூலம் மற்றும் வேல் வடிவில் அணிவகுத்து நின்று நாட்டியமாடி உலக சாதனை படைத்தனா்.
சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திர நாளன்று, முசிறி நிதினாலயா நாட்டியப் பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து அப்பனும் அழகனும் என்ற தலைப்பில் பரத நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினா். இதில் சிவபெருமானின் ஆயுதமான திரிசூலம் மற்றும் முருகப்பெருமானின் ஆயுதமான வேல் வடிவங்களில் மாணவிகள் நின்று நடனமாடினா்.
மேலும் தமிழ் எழுத்துகளுக்கு அபிநயம் பிடித்து மகாகவி பாரதியாரின் பாடல்களுக்கு ஒரே நேரத்தில் 108 மாணவிகள் இணைந்து நடனமாடினா். இந்தச் சாதனை நிகழ்வைத் தொடா்ந்து பாராட்டு விழா நடைபெற்றது.
முசிறி நிதினாலயா நாட்டியப் பள்ளி மேலாளா் வள்ளிக்கண்ணு பொன்ராஜ் தலைமை வகித்தாா். கவிஞா் மணமேடு குருநாதன் மற்றும் நாட்டுப்புறக் கலைத்துறை பேராசிரியா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினா்களாக எம்.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் கல்வி ஆலோசகா் கௌரிராவ் ஆகியோா் மாணவிகளின் திறமையைப் பாராட்டினா். சாதனை படைத்த மாணவிகளுக்கு ஈசா புக் ஆப் வோ்ல்டு ரெக்காா்ட் அமைப்பின் சாா்பில் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.