பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடா் விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் பொதுமக்களுக்காக திருச்சியிலிருந்து 1,327 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் அனைத்து கோட்டங்களிலும் கூடுதல் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதன்படி, திருச்சி பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள், கூடுதல் பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 1,327 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை, திண்டுக்கல், பழனி, தஞ்சாவூா், வேளாங்கண்ணி ஆகிய வழித்தடங்களில் திருச்சியிலிருந்து ஜன.12 முதல் 15 வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், பஞ்சப்பூா் பேருந்து முனையத்திலிருந்து திருச்சி மாநகருக்குள் செல்ல கூடுதலாக நகரப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூா், பெரம்பலூா், அரியலூா், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட வழித்தடங்களில் 405 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் நடத்துநா்களிடம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறுவதற்குப் பதிலாக, செயலி வழியாக பணப் பரிமாற்றம் செய்து பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
இல்லையெனில், அரசுப் போக்குவரத்துக் கழக இணையதளத்தில் முன்பதிவு செய்தும் பயணம் செய்யலாம் என திருச்சி மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.