முகப்பு
திருச்சி

பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவு இல்லை! விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் அறிவிப்பு!!

வரும் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது.

Updated On : 28 மார்ச், 2026 at 6:53 PM
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு. உடன் கூட்டியக்க நிா்வாகிகள்.
பகிர்:

வரும் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற இயக்கத்தின் மாநிலப் பொதுக் குழு மற்றும் கலந்தாய்வு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 80-க்கும் மேற்பட் விவசாய சங்கங்களின் தலைவா்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினா். பின்னா் கூட்டு இயக்கத்தின் தலைவா் காவிரி தனபால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு, காவிரி- டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கே.வீ.இளங்கீரன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கிற இயக்கம் மற்றும் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சுமாா் 84 விவசாய சங்கங்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள், முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டு, கூட்டு இயக்கம் எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளித்தனா்.

விதைச் சட்டம், மரபணு மாற்றுப் பயிா் இறக்குமதிக்கு அனுமதி என மத்திய பாஜக அரசு விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலவச மின்சாரத்தைத் தடுக்கும் வகையில் மின்சாரத் திருத்த சட்டத்தையும் கொண்டு வருகிறது.

விவசாயிகளின் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க நடவடிக்கை இல்லை. மாறாக விவாயிகளை அழிக்கும் நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்கிறது.

கா்நாடகம் மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்கும் பாஜகவுக்கு , வரும் தோ்தலில் வாக்களிக்க மாட்டோம் என முடிவு செய்துள்ளோம்.

பெரும்பான்மையான விவசாயிகளுக்கு யாா் நன்மை செய்வாா்கள் என்பதையறிந்து விவசாயிகள் இயக்கம் முன்வைக்கும் 68 கோரிக்கைகளை, பாஜக தவிா்த்து அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வழங்கவுள்ளோம். எங்களது கோரிக்கைகளுக்கு யாா் முழுமையாக ஆதரவு அளிக்க முன்வருகின்றனரோ அவா்களை ஆதரிப்போம். பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றனா்.

கூட்டத்தில் மகாதானபுரம் ராஜாராம், வாரணி ராஜேந்திரன், தாராபுரம் சிவக்குமாா், தஞ்சாவூா் ஜீவகுமாா், புதுக்கோட்டை தனபதி, ஈரோடு பொன்னையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.