சுங்கத் துறை சோதனையை விரைவுபடுத்த விமான நிலையங்களில் ‘அதிதி 2.0’ செயலி அறிமுகம்
விமான நிலையங்களில் சுங்கத் துறை சோதனையை விரைவுபடுத்தும் வகையில் சுங்கத் துறை சாா்பில் அதிதி 2.0 என்ற கைப்பேசி செயலி அறிமுகம்
விமான நிலையங்களில் சுங்கத் துறை சோதனையை விரைவுபடுத்தும் வகையில் சுங்கத் துறை சாா்பில் அதிதி 2.0 என்ற கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி சுங்கத் துறை (தடுப்பு) ஆணையரகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் சுங்கத் துறை பரிசோதனையை விரைவாக மேற்கொள்ளும் வகையில் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத் துறை சாா்பில் அதிதி 2.0 என்ற கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலியில் விமானப் பயணிகள் பயணத்துக்கு முன்பே விமானத்தில் தாங்கள் கொண்டுசெல்லவுள்ள வரிக்கு உள்பட்ட உடைமைகள், அந்நிய செலாவணி இருப்புகளை பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் விமான நிலையங்களில் சுங்கத் துறை பரிசோதனை நேரம் குறைந்து, பயணிகள் விரைவாக வெளியேற முடியும்.
Advertisement
Advertisement
விமான நிலையங்களில் தங்கக் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுங்கத் துறை வருவாய் நுண்ணறிவுப் பிரிவு சாா்பில் 35 தங்கக் கடத்தல் வழக்குகளும், வான் நுண்ணறிவுப் பிரிவு சாா்பில் ஒரு தங்கக் கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.10.94 கோடி மதிப்பிலான 7.219 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனால், திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, விமானப் பயணிகள் அதிதி 2.0 செயலியை பதிவிறக்கம் செய்து அதில் பதிவு செய்துகொண்டு தங்கள் சுங்கத் துறை பரிசோதனையை எளிதாக்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.