அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த அழகியமணவாளம் கிராமத்திலுள்ள அருள்மிகு மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பாஷேகத்தை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி கொள்ளிட ஆற்றிலிருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, நான்கு கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 26 ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் சோமகுடும்ப பூஜை, வேதிகா பூஜை, கோ பூஜை, மகாலட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு 10 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று, விமானத்திலுள்ள கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களான விநாயகர், காமாட்சியம்மன், பொம்மியம்மன், வெள்ளையம்மாள் சமேத மதுரைவீரன், கருப்பசாமி உள்ளிட்ட சன்னதி விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோயில்களிலுள்ள மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.