தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலநிதியிலிருந்து அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 மானியதாரர்களுக்கு ரூ.10.67 லட்சம் மதிப்பில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி.
அரியலூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து வழங்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசுத் தொகை, 6 பேருக்கு ஈமச்சடங்குத் தொகை உள்ளிட்ட ரூ.57 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகைகளை வழங்கி. மேலும் அவர் பேசியது:
முன்னாள் படைவீரர் நல அலுவலகம் சார்பில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலநிதியிலிருந்து 45 மானியதாரர்களுக்கு ரூ.10.67 லட்சம் நிதியுதவி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் 17 பேருக்கு தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை மற்றும் ஆண்டு பராமரிப்பு மானியம் ரூ.1.51 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கல்வி நிதியுதவியின் கீழ், 11 முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு நிகழாண்டில் ரூ.2.64 லட்சம் மதிப்பில் உதவித்தொகைவழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலமாக சிறப்பு வேலைவாய்ப்புப் பிரிவில் 129 முன்னாள் படைவீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் நிகழாண்டில் 75 முன்னாள் படைவீரர்கள் வேலைவாய்ப்பிற்காக பரிந்துரைக்கப்பட்டு 9 முன்னாள் படைவீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
நிகழ்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன் முன்னிலை வகித்தார். முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கா.குணசேகரன், முன்னாள் படைவீரர் நல அலுவலகக் கண்காணிப்பாளர் ம.கலையரசிகாந்திமதி, உதவியாளர் மு.ஜஸ்டின் திரவியம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினர் நிகழ்வில் பங்கேற்றனர்.