அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்து, பல்வேறு உதவித்தொகைகள், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட
கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 630 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய ஆட்சியர், விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.52,500 மதிப்பில் தையல் இயந்திரங்களை ஆட்சியர் விஜயலட்சுமி வழங்கினார்.
சமூக பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் அ.பூங்கோதை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) ஜெ.பாலாஜி மற்றும் அனைத்துத்துறை கூட்டத்தில் பங்கேற்றனர்.
குடிநீர் விநியோகம் கோரி: தா.பழூர் ஒன்றியம், அம்பாவூர் ஊராட்சி பெருமாள் தீயனூர் காலனித் தெருவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய பயன்பட்ட மின் மோட்டார் கோளாறாகி ஓராண்டாகியும் இதுவரை சரிசெய்யப்படவில்லை. அதை விரைந்து சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இதுபோல, அரியலூர் தெற்கு எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குப் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர்.