அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தேர்தல் பறக்கும்படையினர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.
மக்களவைத் தேர்தலையொட்டி அரியலூர் அருகே ஆண்டிமடம் அடுத்த அழகாபுரம் பிரிவு சாலையில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலரும், கூட்டுறவு சார் பதிவாளருமான சசிகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டதில் ரூ.55 ஆயிரம் ரொக்கம் தெரியவந்தது. விசாரணையில்,வேலூர் மாவட்டம் ஓட்டேரி, சாமி நகர்,15 ஆவது குறுக்குத்தெருவைச் சேர்ந்த ஸ்ரீராமன் மகன் சூர்யன் உரிய ஆவணங்கள் இன்றி ரொக்கம் கொண்டுவந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் ரொக்கத்தைப் பறிமுதல் செய்து ஜயங்கொண்டம் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.