அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பறக்கும் படையினர் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.91 ஆயிரத்து 850 பறிமுதல் செய்யப்பட்டன.
மீன்சுருட்டி அருகே திருச்சி - சிதம்பரம் சாலை ராமதேவநல்லூரில் தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழு அலுவலரும் கூட்டுறவு சார்-பதிவாளருமான சசிகுமார் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மீன்சுருட்டியிலிருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த மனோகர், ரூ.91 ஆயிரத்து 850-யை உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ரொக்கத்தைப் பறிமுதல் செய்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி வசம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.