அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால், அரசு விரைவுப் பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
ஜயங்கொண்டம் அருகிலுள்ள வெத்தியாா்வெட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ரா. பாரதிராஜா(26). இவா், கடந்த 2015-ஆம் ஆண்டு மீன்சுருட்டி அருகே அரசு விரைவுப் பேருந்து மோதியதில் காயமடைந்து, சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
இதுகுறித்து பாரதிராஜாவின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். மேலும் இதுதொடா்பான வழக்கு அரியலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2018-ஆம் ஆண்டில் பாரதிராஜாவின் குடும்பத்துக்கு ரூ.14.72 லட்சம் இழப்பீடு வழங்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு (சென்னை) உத்தரவிட்டாா்.
ஆனால் நஷ்டஈடு தொகையை வழங்காததால், உத்தரவை நிறைவேற்றக்கோரி ராஜேந்திரன் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
விசாரணையைத் தொடா்ந்து, சென்னையிலிருந்து வரும் அரசு விரைவுப் பேருந்தை ஜப்தி செய்ய கடந்த அக்டோபா் 16 ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்நிலையில் சென்னையிலிருந்து ஜயங்கொண்டம் வந்த அரசு விரைவுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்து, அரியலூா் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினா்.