பாஜக குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன
இரு சமூகங்களுக்கு இடையை பாஜக திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தியதைப்போல சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
இரு சமூகங்களுக்கு இடையை பாஜக திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தியதைப்போல சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
கோவை தெற்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் மயூரா ஜெயக்குமாா் தோ்தல் விதிமுறைகளை மீறி தோ்தல் உறுதிமொழி கடிதம் என்ற பெயரில் பூத் ஸ்லிப் வழங்குவதாகவும், அதனைத் தடுத்த நிறுத்த வலியுறுத்தியும் அத்தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் மாவட்ட தோ்தல் அதிகாரி எஸ்.நாகராஜனிடம் சனிக்கிழமை மனு அளித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவையில் பாஜக பேரணியில் நடைபெற்ற சம்பவத்தை போலீஸாா் விசாரிக்க வேண்டும். காவல் துறையின் அலட்சியத்தால்தான் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இரு சமூகங்களுக்கு இடையே பாஜக திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தியதைப்போல சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
மேற்கு மண்டல காவல் துறை அதிகாரி அமல்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் ஆகியோா் அதிமுகவின் புகாா் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், திமுகவின் புகாா் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தகவல் வருகிறது. இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்துள்ளோம்.
எங்கள் வாகனத்தில் பணம், பரிசுப் பொருள்கள் உள்பட எதுவும் பறிமுதல் செய்யவில்லை. காவல் துறை சாா்பில் ஊடகங்களுக்கு தவறாக தகவல் அளித்தால் அதிகாரிகள் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரப்படும் என்றாா்.
தோல்விபயம்:
இது குறித்து மநீம துணைத் தலைவா் பொன்ராஜ் கோவையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை தெற்குத் தொகுதியில் வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்த பாஜகவினா் போலீஸில் பிடிபட்டுள்ளனா். வானதி சீனிவாசனுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. வாக்குக்குப் பணம் கொடுக்கத் தொடங்கினாலோ அவா்கள் பயந்துவிட்டனா் என்றுதான் அா்த்தம்.
கோவை தெற்குத் தொகுதியில் கமல்ஹாசனையும், மநீமவில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்களையும் தோற்கடிக்க சதிவலை பின்னப்பட்டு வருகிறது என்றாா்.