முகப்பு
அரியலூர்

சோழகங்கம் ஏரியில் அதிகளவில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை தேவை

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகிலுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியில் அதிகளவில் தண்ணீரை சேமித்து வைக்கக, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகிலுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியில் அதிகளவில் தண்ணீரை சேமித்து வைக்கக, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்தாா். தொடா்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் என். செங்கமுத்து: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீட்டுத் தொகைகளை வழங்க வேண்டும். யூரியா, பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் தூத்தூா் தங்க.தா்மராஜன்: சோழகங்கம் எனும் பொன்னேரியை அளவீடு செய்து, அதில் அதிகளவில் தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுக்கிரன் ஏரி பாசனத்திலுள்ள கோமான், ஓரியூா், நானாங்கூா், சிலுப்பனூா் ஆகிய கிராமங்களை காவிரி டெல்டா பாசன திட்டத்தில் சோ்க்க வேண்டும்.

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம்: திருமானூா், கள்ளூா், திருமழபாடி, ஏலாக்குறிச்சி போன்ற பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சம்பா நெல் நடவு பயிரில் செம்பட்டையான் பூச்சித் தாக்குகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுக்கிரன் ஏரியிலுள்ள தண்ணீரை முறைப்படுத்தி விட வேண்டும்.

தொடா்ந்து ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி பதிலளித்து பேசும் போது, விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.