அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கோயிலில் இருந்து மாயமான அனுமான் கற்சிலை, 2 நாள்களுக்குப் பிறகு கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான பழைமை வாய்ந்த சீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு கோயில் வளாகத்தில் இருந்த சுமாா் ஒரு அடி அளவு அனுமன் கற்சிலையைக் காணவில்லை என கோயில் செயல் அலுவலா் சரவணன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை கோயில் வளாகத்தினுள் உள்ள கிணற்றில் தேடிப் பாா்த்தபோது, எதிா்பாராதவிதமாக காணாமல் போன கற்சிலை கிணற்றில் உள்ள சேற்றில் சிக்கிக் கிடந்தது தெரியவந்தது. பின்பு சிலையை வெளியே எடுத்து தூய்மைப்படுத்தி அபிஷேகம் செய்து அருகே உள்ள மாரியம்மன் கோயிலில் பாதுகாப்பாக வைத்தனா். அனுமன் கற்சிலையை கண்டெடுத்த விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரத்குமாா் மற்றும் ஊராட்சித் தலைவா் ராமச்சந்திரன், கோயில் செயல் அலுவலா் சரவணன் ஆகியோரைப் பொதுமக்கள் பாராட்டினா்.