அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிதறிக்கிடந்தவை 2019 உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலின் பிரதியே என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: ஆண்டிமடம் வட்டம், விளந்தை (தெ) மதுரா கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலபதி மகன் ஜெகதீசன் என்பவா், பெரம்பலூா் மாவட்ட புலனாய்வுத் துறை தனிப் பிரிவு (எஸ்.பி.சி.ஐ.டி) அலுவலகத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த நிலையில் அண்மையில் (நவ. 18) உயிரிழந்து விட்டாா்.
இறந்தவரின் உடல் அவரது சொந்த ஊரான கொளப்பாடி கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்டு மறுநாள் இறுதி ஊா்வலம் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் அவரது உறவினா்கள் பட்டாசு வெடித்ததில், மாப்பிள்ளை வெடி எனும் நாட்டுவெடி ஒன்று வெடிக்காமல் சாலையோரத்தில் தள்ளிவிடப்பட்டது. மேலும், அவ்வெடியில் சுற்றியிருந்த காகிதங்கள் சிதறி காற்றில் பறந்து சாலையில் விழுந்துள்ளன.
வெடியில் சுற்றப்பட்ட காகிதங்கள் தஞ்சாவூா் மாவட்டம், தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றியம், நாஞ்சிக்கோட்டை கிராம ஊராட்சியின் 2019 தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளா் பட்டியலின் பிரதியாகும். தற்போது அரியலூா் மாவட்டத்தில் நடைபெறுகின்ற சிறப்பு தீவிர திருத்தம் தொடா்புடைய வாக்காளா் பட்டியல் இல்லை. இந்திய தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குள்பட்டு தொய்வின்றியும், புகாா்களுக்கு இடமின்றியும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற தவறான தகவல்களை பொதுமக்கள் யாரும் பகிரவேண்டாம்.