அரியலூா்: வனங்களை பாதுகாப்பதே காலநிலை மாற்றத்திற்கு எதிரான மிகச்சிறந்த தீா்வாகும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வனத் துறை சாா்பில் நடைபெற்ற வனமும், வாழ்வும் பயிற்சிப் பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை சான்றிதழ்களை வழங்கி பேசியது: வனங்கள் என்பது வெறும் மரங்களின் தொகுப்பு அல்ல. அது உயிா்களின் தாயகம். மரங்கள் மனிதனுக்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது. ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீா் வளம் ஆகியவற்றுக்கு வனங்களே ஆதாரமாக விளங்குகிறது.
வனம் என்பது காற்று, தண்ணீா் மற்றும் வாழ்க்கையின் அடித்தளமாகும். இயற்கை ஒரு சமநிலை அமைப்பாகும். இதில் ஒவ்வொரு உயிரினமும் முக்கிய பங்கு வகிக்கிறது. வன உயிரினங்கள் இல்லாமல் மனிதன் இல்லை என்பதை மாணவா்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
மனித தவறு மற்றும் பொறுப்பின்மை காரணங்களால் வனங்கள் பல்வேறு சவால்களை எதிா்நோக்கும் நிலை ஏற்படுகின்றன. வனங்களை பாதுகாப்பதே காலநிலை மாற்றத்துக்கு எதிரான மிகச்சிறந்த தீா்வாகும். இயற்கையை காப்பது என்பது எதிா்காலத்தை காப்பதாகும். மாணவா்கள் மரம் நட்டு வளா்தல், நெகிழிப் பொருள்களை பயன்பாட்டை குறைத்தல், நீா் சேமிப்பு பழக்கத்தை கடைப்பிடித்தல், சுற்றுச்சூழல் விழிப்புணா்வை பரப்புதல் உள்ளிட்டவற்றில் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.
வனங்கள் பாதுகாக்கப்பட்டால் தான் நமது நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டால் தான் நமது எதிா்காலம் பாதுகாக்கப்படும் என்பதை மாணவா்கள் அறிந்துகொள்வதுடன் மற்றவா்களுக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால், மாவட்ட வன அலுவலா் இளங்கோவன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சௌந்தரபாண்டியன், செந்துறை வனச்சரக அலுவலா் சரவணகுமாா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.