சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கரூர் மற்றும் குளித்தலையில் சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூர் மற்றும் குளித்தலையில் சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தொடக்கிவைத்தார். கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம், ஜவகர் பஜார், அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகத்தை பேரணி வந்தடைந்தது.
பேரணியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் சாலைப் பாதுகாப்பு வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திச் சென்றனர். வருவாய் கோட்டாட்சியர் நெல்வேந்தன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் க. குமாரவேலு, முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) சாந்தமூர்த்தி, மாவட்டக் கல்வி அலுவலர் கலையரசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
குளித்தலையில்...
குளித்தலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு குளித்தலை அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் மனோகரன் தலைமை வகித்தார்.
குளித்தலை மோட்டார் வாகன ஆய்வாளர் சி. சிவக்குமார், குளித்தலை காவல் ஆய்வாளர் முகமதுஇத்ரீஸ், உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன், பாரதி வித்யாலயா பள்ளித் தாளாளர் கே. சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசுப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகளான கடைவீதி, பஜனைமடம், ஆண்டார் பிரதான சாலை, பேராளம்மன் கோவில் தெரு, பேருந்து நிலையம், கரூர் - திருச்சி தேசியநெடுஞ்சாலை, சுங்கவாயில் வழியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் அரசு ஆண்கள் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம், தேசிய மாணவர் படை, பாரதி வித்யாலயா பள்ளி மாணவர்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நிர்வாகிகள், ஓட்டுநர் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர். பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்த விளம்பர பதாகைகள் கைகளில் ஏந்தியபடி, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.