பள்ளி மாணவ, மாணவிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டிய பள்ளித் தலைமை ஆசிரியையைக் கண்டித்து மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகேயுள்ள ஜல்லிப்பட்டியில் உள்ள தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 96 மாணவ, மாணவிகள் பயில்கிறார்கள். இப்பள்ளி தலைமையாசிரியையான சாரதா மாணவ, மாணவிகள் ஏதாவது தவறு செய்தால் அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவாராம். இதை மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறும்போது ஆசிரியர்கள் உங்களது நன்மைக்காகத்தான் திட்டுவர் எனப் பெற்றோர் கூறிவந்தனராம். இந்நிலையில் வியாழக்கிழமை அந்தத் தலைமையாசிரியை பள்ளி மாணவி ஒருவரை மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டினாராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் இதைத் தங்களது பெற்றோரிடம் கூற, ஆத்திரமடைந்த அவர்கள் வெள்ளிக்கிழமை காலை இந்தப் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்த தலைமை ஆசிரியை பள்ளிக்குச் செல்லவில்லையாம்.
இந்நிலையில் தாந்தோணி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ரமணி அந்தப் பள்ளிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இதுபோன்ற செயல்கள் நடக்காது, தலைமை ஆசிரியைக்காக நான் மன்னிப்பு கோருகிறேன் எனக் கூறியதையடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர்.