கரூர் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைத் திருவிழா போட்டி நாரத கான சபாவில் அண்மையில் நடைபெற்றது.
இதில், கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு நடனம், பாட்டுப்போட்டி, இசைக்கருவிகள் வாசித்தல், பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் கரூர் பரணிபார்க் கல்விக்குழும மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். இதற்கான பாராட்டு விழா பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பரணிபார்க் கல்விக்குழுமத் தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். முதன்மை முதல்வர் சொ. ராமசுப்ரமணியன், நிர்வாக அலுவலர் சுரேஷ், பரணிபார்க் பள்ளி முதல்வர் சேகர், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.