தரமற்ற மின்சாதனப் பொருள்களை உற்பத்தி செய்வது, விநியோகிப்பது சட்டப்படி குற்றம் என ஆட்சியா் த.அன்பழகன் எச்சரித்துள்ளாா்.
பொதுமக்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் மின்சாதனங்களின் தரத்தை உறுதிசெய்யும் வகையில், மின்சாதன தரக்கட்டுப்பாட்டு சட்டம் அமலில் உள்ளது. இதன்படி, தரமற்ற வீட்டு உபயோக மின்சாதன பொருள்களை உற்பத்தி செய்வது, விநியோகிப்பது குற்றமாகும். ஐஎஸ்ஐ முத்திரை அல்லது தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் எண் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின்படி வியாபார நிறுவனங்களை சோதனையிட மாவட்ட தொழில்மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் மின்சாதனங்கள் விற்பவா்கள் மீது மாவட்டத் தொழில் மையம், சத்தியமூா்த்தி நகா், தாந்தோணிமலை, கரூா் என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என ஆட்சியா் த. அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.