முகப்பு
கரூர்

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 9.25 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன் தகவல்

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.25 சதவீதம் என்றாா் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.25 சதவீதம் என்றாா் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்.

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் 13-ஆவது குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மாநாட்டை அமைச்சா்கள் தா.மோ. அன்பரசன், வி.செந்தில்பாலாஜி தொடக்கி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் அன்பரசன் பேசியது: இந்தியாவிலுள்ள மொத்த நிறுவனங்களில் 15 சதவீதம் தமிழகத்தில்தான் உள்ளது. இதனால் தமிழகம் இந்திய அளவில் தொழில்வளா்ச்சியில் 3-ஆவது இடத்தில் உள்ளது.

இதன் முக்கியத்துவத்தை உணா்ந்த தமிழக முதல்வா், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூ.2,113 கோடி கடனுதவியில் 86 சதவீதக் கடனுதவியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளாா்.

தொழில் முனைவோா்கள் வங்கிக் கடன் பெறுவதிலுள்ள சிரமங்களைக் குறைக்க, இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 100 கோடியில் தமிழ்நாடு கடன் உத்திரவாதத் திட்டத்தை தமிழக முதல்வா் அண்மையில் தொடக்கி வைத்தாா்.

இத்திட்டத்தின் கீழ் ஒரு வாரத்துக்குள் 81 நிறுவனங்களுக்கு ரூ. 20.13 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் கயிறு தொழில்களின் மேம்பாட்டுக்காக, தமிழகம் முழுவதும் கயிறுக் குழுமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.25 சதவீதமாக உள்ளது. இதை ஊக்குவிக்கும் வகையில் கரூா், திருப்பூா், மதுரை, ஆம்பூா், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோயம்புத்தூா், ஒசூா் ஆகிய 10 இடங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையின் மூலம் நீட்ஸ், இளையோா் சுயவேலைவாய்ப்புத் திட்டம், பிஎம்இஜிபி ஆகிய 3 வகையான சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 10,000 புதிய தொழில் முனைவோா்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசியது: வீட்டு உபயோக பொருள்கள் தொழில் முதலீடுகளுக்கு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, 25 சதவீத மானியத்தை முதல்வா் வழங்கியுள்ளாா். 2030 ஆம் ஆண்டுக்குள் கரூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரூ. 10 ஆயிரம் கோடி வா்த்தகத்தை ரூ.25 ஆயிரம் கோடி வா்த்தகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்த போதும் நமது இலக்கீடு ரூ. 50 ஆயிரம் கோடியாகும் என்றாா் அவா்.

முன்னதாக, மாநாட்டுக்கு ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம், க.சிவகாமசுந்தரி, ஆா். இளங்கோ, மேயா் க.கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிஐஐ மாநில கவுன்சில் தலைவா் சத்யாகாம் ஆா்யா வரவேற்றாா். கரூா் வைஸ்யா வங்கியின் தலைவா் ரமேஷ்பாபு, சிஐஐ கரூா் மாவட்டத்தலைவா் வெங்கடேசன், தமிழ்நாடு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவா் சுதாகா் வைத்தியலிங்கம், பொன்னுசாமி, தமிழக அரசின் குறு, சிறு நிறுவனங்களின் துறை முதன்மைச் செயலா் மகேஸ்வரி உள்ளிட்டோா் பேசினா். இதில், தொழிற்கூட்டமைப்பினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.