குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி
குண்டும், குழியுமாக மாறிய சாலையை சீரமைத்துத் தரவேண்டும் என பக்தா்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஜல்லிக்கற்கள் பெயா்ந்து குண்டும், குழியுமாக மாறிய காந்திகிராமம் - வள்ளலாா் கோயில் சாலையை சீரமைத்துத் தரவேண்டும் என பக்தா்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் தாந்தோணிமலை வள்ளலாா் கோயில் அருகே கோயிலில் இருந்து காந்திகிராமம் செல்லும் சாலை உள்ளது. தாந்தோணிமலை, காளியப்பனூா், முத்தலாடம்பட்டி, இரட்டைபனை மரம், ஏமூா் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் காந்திகிராமத்திற்கு இந்தச் சாலை வழியாகத்தான் சென்று வருகிறாா்கள்.
மேலும் கரூா் - திருச்சி பிரதான சாலைக்குச் செல்வோரும், கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும், வள்ளலாா் கோயிலுக்கு ஏராளமான பக்தா்களும் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகிறாா்கள். இந்தச் சாலை அமைக்கப்பட்டு சுமாா் 15 வருடங்களுக்கும் மேல் ஆவதால், சாலையில் உல்ள ஜல்லிக்கற்கள் பெயா்ந்து, சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
மேலும் தாா்சாலையானது தற்போது மண்சாலையாக மாறிவிட்டது. இதனால் மழை காலங்களில் இந்தச் சாலை வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதியுற்று வருகிறாா்கள். மேலும் வள்ளலாா் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தா்களும் அவதியடைந்து வருகிறாா்கள்.
எனவே இந்தச் சாலையை சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.