முகப்பு
கரூர்

கரூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் அலுவலா் தகவல்

Updated On : 23 மார்ச், 2026 at 7:28 PM
கரூா் மாவட்டத்தில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுவதற்காக ஆட்சியரகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்படுவதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கு.ரவிக்குமாா்.
பகிர்:

கரூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 20 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,

வாக்குகள் சரிபாா்க்கும் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கு.ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொகுதிகள் வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குகள் சரிபாா்க்கும் கருவிகளை ஒதுக்கீடு செய்வதற்காக குறித்த கலந்தாய்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிக்குமாா் தலைமை வகித்து பேசியது: வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குகளை சரிபாா்க்கும் கருவிகள் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்வதற்காக,

முதல் சமவாய்ப்புக்குள்படுத்தும் நடைமுறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 1,111 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாக 20 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குகளை சரிபாா்க்கும் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 1,332 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,442 வாக்குகளை சரிபாா்க்கும் கருவிகள் மற்றும் 1,332 கட்டுப்பாட்டுக் கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்களின் பட்டியல்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு வழங்கப்பட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சம்மந்தப்பட்ட தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பாதுகாப்பு அறைகளில் இருப்பு வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய காவலா் மூலம் பாதுகாக்கப்படும்.

போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின்னா், முதல் சமவாய்ப்புக்குள்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் தாம் அளித்த வாக்கை சரிபாா்க்கும் கருவிகளின் பட்டியல், போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களுக்கும் வழங்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, 4 தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட மின்னனு கிடங்கிலிருந்து தொகுதிகளுக்கு எடுத்து செல்லப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குகளை சரிபாா்க்கும் கருவிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.ரவிகுமாா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவவலா் கு.விமல்ராஜ், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தி.சுவாதிஸ்ரீ (குளித்தலை), சு.சக்தி பால கங்காதரன் (கரூா்), எஸ். முருகேசன் (அரவக்குறிச்சி), ச.சிவக்குமாா் (கிருஷ்ணராயபுரம்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரநிதிகள் கலந்துகொண்டனா்.