முகப்பு
கரூர்

காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு

தோகைமலை அருகே வெள்ளிக்கிழமை காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்தான்.

Updated On : 2 மே, 2026 at 2:02 AM
பகிர்:

தோகைமலை அருகே வெள்ளிக்கிழமை காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்தான்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கழுகூரைச் சோ்ந்தவா் ஆண்டிவேல். இவருடைய மகன்கள் கிருஷ்வந்த்(6), சஞ்சீவ்(3). கொத்தனாா் வேலைபாா்க்கும் ஆண்டிவேல் வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல வேலைக்குச் சென்றாா். அப்போது, சிறுவன் சஞ்சீவ் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தான். பின்னா் மாயமான சஞ்சீவை அவரது தாய் மாரியம்மாள், கணவா் ஆண்டிவேலை வரவழைத்து இருவரும் அப்பகுதியில் தேடினா்.

சுமாா் ஒரு மணி நேரத்துக்குபிறகு வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆண்டிவேலுக்குச் சொந்தமான காரை திறந்து பாா்த்தனா். அப்போது காரில் சஞ்சீவ் மூச்சுத்திணறி மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். இதையடுத்து சஞ்சீவை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு சஞ்சீவை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

இதுகுறித்து ஆண்டிவேல் தோகைமலை காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை மேற்கொண்டனா்.

இதில், ஆண்டிவேல் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் சஞ்சீவ் அடிக்கடி ஏறி விளையாடுவது வழக்கமாக இருந்துள்ளான். வெள்ளிக்கிழமை காலையும் காரின் கதவை திறந்து உள்ளே சென்று கதவை மூடிய சிறுவனால் வெளியே வரமுடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.