பெரம்பலூர் மாவட்டத்தில் ஓடும் மருதையாற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, சீரமைக்க வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலர் பி. பாஸ்கரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தை சேர்ந்த சி. ராகவன் தலைமையிலான இளைஞர்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கும் கொள்ளிடம் ஆறு அரியலூர் மாவட்டம் வழியாக சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஓடும் பெரிய ஆறு மருதையாறு. இந்த ஆற்றின் மூலம் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது இந்த ஆற்றில் சீமைக்கருவேல மரங்களாலும், முள்புதர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலங்களில் இந்த ஆற்றின் மூலம் மழைநீரை முழுமையாக தேக்கி வைக்கமுடியாத நிலை உள்ளது. எனவே, மழைக்காலம் தொடங்கும் முன் ஆற்றங்கரையோரத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும், முள் புதர்களையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கியில் கடன் வழங்க வலியுறுத்தல்:
பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடன் வழங்க வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த சிலர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில், லாடபுரத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் செயலராக உள்ள அறிவழகன், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக செம்மறி ஆடுகள் வாங்க வங்கி கடன் அளித்துள்ளார். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடனுதவி வழங்க மறுக்கிறார். இதுகுறித்து, வங்கி செயலரிடம் கேட்டதற்கு உங்களுக்கு கடனுதவி வழங்க முடியாது என கூறுகிறார். எனவே, எங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வங்கி கடனுதவி வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.