வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும் என்றார் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலர் ஆம்ஸ்ட்ராங்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் இரா. முத்துலட்சுமியை ஆதரித்து, அக்கட்சியின் மாநில செயலர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசாரத்தின்போது மேலும் அவர் பேசியது:
நாடு சுதந்திரமடைந்தபோது, 14 சதவீத மக்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. அம்பேத்கர் போராடி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாக்குரிமை பெற்றுக்கொடுத்தார். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி கிடைக்கக் காரணமாக இருந்தவர் அம்பேத்கர். இதனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடியரசு தலைவராகவும், நாட்டின் உயரிய பொறுப்புகளிலும் அமர முடிந்தது. 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸும், 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜகவும் நாட்டில் சாதி பாகுபாட்டையோ, வறுமையையோ ஒழிக்கவில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும். வறுமையை ஒழிப்பேன். இலவச வேலைவாய்ப்பு வழங்குவேன் எனக் கூறும் மாயாவதியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் எனறார் அவர். முன்னதாக, பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலம் மூன்று சாலை சந்திப்பில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், கட்சி தொண்டர்களுடன் பாலக்கரை, சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். பிரசாரத்தின்போது, வேட்பாளர் இரா. முத்துலட்சுமி, வழக்குரைஞர் பி. காமராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.