பெரம்பலூரில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் ரமேஷ் தலைமை வகித்தார். மருத்துவர்கள் நேரு, கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டோர் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இந்தப் போராட்டத்தில், தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு அரசு மருத்துவர்கள்கள், வேப்பூர், காரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.