பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைத் தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணியை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் காதி மற்றும் கிராமத்தொழில் வாரிய முதன்மை நிர்வாக அலுவலர் நடராஜன்.
பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதித்திட்ட பயனாளிகள் மற்றும் தமிழக அரசின் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைத் தொழிலாளர்களைக் கணக்கெடுக்கும் பணி பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில், இப்பணிகளை ஆய்வு செய்ய கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள காதி மற்றும் கிராமத்தொழில் வாரிய முதன்மை நிர்வாக அலுவலர் நடராஜன், பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வேளாண் துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம், மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 257 கணக்கெடுக்கும் பணியாளர்கள் வழங்கிய விவரங்களை, கணினியில் பதிவேற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டுஆய்வு மேற்கொண்ட அவர், எசனை கிராமத்தில் செயல்படும் பொது மையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளையும், பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மகளிர் திட்ட அலுவலர் சு. தேவநாதன், வேளாண் இணை இயக்குநர் இளவரசன், கோட்டாட்சியர் விசுவநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.