பெரம்பலூர் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகிலுள்ள எசனை வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் சின்னதுரை (40). இவரது, வீட்டுக்கு அருகில் வசிப்பவர் முத்துசாமி மகன் முகிலன். இருவருக்கும் நீண்ட நாள்களாக இடப்பிரச்னை இருந்து வந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் வழக்குரைஞர் சின்னத்துரையை முகிலன், அவரது மனைவி சரண்யா தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் சின்னத்துரை அளித்த புகாரின் வழக்குப்பதிவு செய்த போலீஸார் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையாம்.
காவல்துறையின் இத்தகைய செயல்பாட்டைக் கண்டித்தும், வழக்குரைஞரைத் தாக்கிய முகிலன் உள்ளிட்டோரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பெரம்பலூர் பார் அசோசியேசன்
தலைவர் இ. வள்ளுவன் நம்பி மற்றும் அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவர் முகமது இலியாஸ் ஆகியோர் தலைமையில், அச்சங்கங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தால் நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.