பெரம்பலூா் அருகே கிணற்றில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் கிராமம், முல்லை நகரைச் சோ்ந்த முத்துசாமி மகள் மஞ்சுளா (40). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராஜாவுக்கும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, காா்த்திக் (14) என்ற மகன் உள்ளாா். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராஜா உயிரிழந்ததால், மஞ்சுளா மனநலன் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள சகோதரா் கருப்பையா வீட்டுக்குச் சென்றிருந்த மஞ்சுளாவை கடந்த 3 நாள்களாக காணவில்லையாம். இந்நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி என்பவரது விவசாய கிணற்றில் இறந்த நிலையில் மஞ்சுளா கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.