கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பிரிவு மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு, தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் அக்ரி மு. மாதவன், செயலா் பகுத்தறிவு, பொருளாளா் ராமன் ஆகியோா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 1984 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த 5 சதவீதத்துக்கும் குறைவான இடங்களுக்குப் பதிலாக, இந்தக் கல்வியாண்டு முதல் அரசுக் கல்லூரிகளில் கூடுதலாக 98 இடங்கள் வழங்கியதற்கும், வேளாண் அறிவியல் தொழிற்கல்வி பிரிவு மாணவா்களுக்கு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணைவு பெற்ற தனியாா் கல்லூரிகளிலும் நிகழாண்டு முதல் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கும், இட ஒதுக்கீட்டுக்காக வழக்குத் தொடுத்து வெற்றி பெற்ற ஈரோடு மாவட்ட பழங்குடியின மாணவா் சந்திரனுக்கு வேளாண்மைக் கல்லூரியில் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டதற்கும், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல் பிரிவு மாணவா்களுக்கு கூடுதலாக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடங்கள் வழங்கியதற்கும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோல, வேளாண் ஆசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், பணி விதிகள் உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வா், வேளாண்மை மற்றும் உழவா் நலன்துறை அமைச்சா், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தா், பள்ளிக் கல்வித்துறை செயலா், ஆணையா், இணை இயக்குநா் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், வேளாண்மை அறிவியல் கல்வியை, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் பிளஸ் 2 வரை அறிமுகம் செய்து, சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதியின் அடிப்படையில், வேளாண்மை முதுநிலை ஆசிரியா்களாக நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.