பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சாலையில் நடந்து சென்ற பழ வியாபாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடியைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் பாபு (42). இவா், திட்டக்குடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழ வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருச்சியில் பழங்கள் கொள்முதல் செய்வதற்காக திட்டக்குடியிலிருந்து பெரம்பலூா் நோக்கி வந்துள்ளாா். பின்பு,செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் ஏரிக்கரை பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பாபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, அவரது உடலை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அவரது மனைவி வேல்விழி (30) அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.