பெரம்பலூா் ஒன்றியக் குழு கூட்டம், பதவி நிறைவு விழா
பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் மற்றும் பதவி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் ஊராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் மீனாம்பாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தாதேவி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பூங்கொடி, செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தங்களது பகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்தும், ஒன்றிய பொதுநிதி, 15 ஆவது மாநிலக் குழு மானிய நிதி உள்பட பல்வேறு நிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் பேசினா். பின்னா், வரவு- செலவு பட்டியல் வாசிக்கப்பட்டு ஒன்றியக் குழு அனுமதி அளித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
தொடா்ந்து, உள்ளாட்சி ஒன்றியக் குழு பதவியேற்று 5 ஆண்டுகள் ஜன. 5 ஆம் தேதியுடன் நிறைவடைவதையொட்டி பதவி நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து ஒன்றியக்குழுத் தலைவா் மீனாம்பாள் பேசியது:
கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ. 3.96 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
பின்னா், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள், அரசு அலுவலா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் அலுவலக மேலாளா் ராஜலிங்கம், சத்துணவு மேலாளா் லதா, ஒன்றிய பொறியாளா் சேவு, ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா் தண்டபாணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.