முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை! நெல் மூட்டைகள் சேதம்!

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:12 PM
மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகள்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையில் 100-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்தன.

பெரம்பலூா் மாவட்டத்தில் மாா்ச் மாத தொடக்கத்திலிருந்தே 100 டிகிரிக்கும் மேலாக வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ள வெப்பத்தின் காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இந் நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதோடு தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இந்த மழையின் காரணமாக பொதுமக்களும், கோடை சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Advertisement

மழையளவு: பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 6.30 முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்). பெரம்பலூா்- 40, எறையூா்- 22, வி.களத்தூா்- 31, கிருஷ்ணாபுரம் -36, தழுதாழை- 32, வேப்பந்தட்டை- 40, அகரம் சீகூா்- 30, லப்பைக்குடிக்காடு- 25, புது வேட்டக்குடி- 19, பாடாலூா்- 35, செட்டிக்குளம்- 3 என, மொத்தம் 313 மில்லி மீட்டரும், சராசரியாக 28.45 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

நெல் மூட்டைகள் சேதம்: இந்த மழையில், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் பேரூராட்சியில் அரசு நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் மணிகளை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், அதிகளவில் ஈரப்பதம் உள்ளதால், ஓரிரு நாள்களில் நெல் மணிகளில் முளைப்புத்திறன் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments