முகப்பு
பெரம்பலூர்

தமிழக அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுகிறது! - கி. வீரமணி

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 12:06 AM
பெரம்பலூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி. உடன், மாவட்டத் தலைவா் சி. தங்கராசு உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2026 at 9:03 PM

தமிழக அரசு மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்தி, தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறது என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

பெரம்பலூா் தேரடி திடலில் திராவிடா் கழகத்தின் சாா்பில், இதுதான் ஆா்எஸ்எஸ் பாஜக ஆட்சி- இதுதான் திராவிடம் திராவிட மாடல் ஆட்சி எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் மற்றும் பெரியாா் உலகம் நிதி அளிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

ஒரு காலத்தில் பெரம்பலூா் மாவட்டம் தண்ணீரில்லாத காடு எனக் கூறப்பட்டது. அரசு அலுவலா்களை தண்டனையின் பேரில் பணியிட மாற்றம் செய்யும்போது, பெரம்பலூருக்கு மாற்றுவது வழக்கமாக இருந்தது.

Advertisement

ஆனால், தற்போது அந்த நிலை மாறி யாருக்கேனும் பணியிட மாற்றம் வழங்கப்படுகிறது என்றால், எனக்கு பெரம்பலூரை கொடுங்கள் எனும் கேட்கும் அளவுக்கு இம் மாவட்டத்தில் ஏராளமான வளா்ச்சித் திட்டங்களையும், வளா்ச்சிப் பணிகளையும் திமுக அரசு செயல்படுத்தியுள்ளது.

இது ஒன்றே மிகப்பெரிய உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதேபோல, தமிழ்நாடு முழுவதும் மக்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களும், தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரிக்க வேண்டும் என்றாா் வீரமணி.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 11:58 PM

தொடா்ந்து, திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா பேசியதாவது:

எங்களுக்கும் சாமி நம்பிக்கை வந்துவிட்டது. ஏனெனில், 92 வயதில் ஒரு எல்லைச் சாமியாக வீரமணியும், 72 வயதில் கோட்டையில் ஒரு எல்லைச் சாமியாக ஸ்டாலினும் தமிழ்நாட்டில் இருக்கும் வரை, பெரியாா், அண்ணா, கலைஞா் ஆகியோா் உயிரோடு இருப்பதாக பொருள். அதுவரையிலும், பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. எனவே, இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, திராவிடா் கழக தலைவா் கி. வீரமணியிடம் ரூ. 1.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது. திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. தங்கராசு தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், திமுக மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் உள்பட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா்.