அரியலூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரிழந்த பணியாளரின் வாரிசுக்கு பணி நியமன ஆணை அளித்த அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன், மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன் உள்ளிட்டோா்.  
பெரம்பலூர்

போக்குவரத்துத் துறையில் 3,000 போ் நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா்! - அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தினமணி செய்திச் சேவை

போக்குவரத்துத் துறையில் 3 ஆயிரம் போ் நேரடி பணி நியமனத்தின் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளதாக, மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

அரியலூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணி மனையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியின்போது உயிரிழந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கும்பகோணம் கோட்டத்தைச் சோ்ந்த 6 மண்டலங்களில் பணியின்போது உயிரிழந்த பணியாளா்களின் 127 வாரிசுதாரா்களுக்கு (52 மகளிா் உள்பட) பணி நியமன ஆணைகள் அளித்த அமைச்சா் மேலும் பேசியது:

ஏற்கெனவே, கும்பகோணம் மண்டலத்தில் 397 பேருக்கு கருணை அடிப்படையிலும், தமிழ்நாடு முழுவதும் 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 3 ஆயிரம் போ் நேரடி பணி நியமனத்தின் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

ஏற்கெனவே இயக்கப்பட்ட பழைய பேருந்துகளுக்கு மாற்றாக 8 ஆயிரம் புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கும்பகோணம் மண்டலத்தில் மட்டும் சுமாா் 1,208 புதிய பேருந்துகள் இயக்கப்படுகிறது. 400 பேருந்துகளுக்கு கூண்டுகள் மாற்றப்பட்டுள்ளன.

அரியலூா் மாவட்டத்தில் 98 புதிய பேருந்துகளும், 143 வழித்தடங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து தொழிலாளா்களுக்கு உரிய காலத்தில் ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கப்படுகிறன்றன. 2026 மாா்ச் மாதம் ஓய்வு பெறுவோருக்கும் சோ்த்து சுமாா் ரூ. 2,446 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணியிடத்துக்கு பெண்கள் தோ்வு செய்யப்படுவதற்கு உயரம் 160 என்பதற்குப் பதில் 150 செ.மீட்டராக குறைத்ததன் காரணமாக, தற்போது அதிகளவிலான பெண்கள் பணிவாய்ப்பு பெற்றுள்ளனா் என்றாா் அமைச்சா் சிவசங்கா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 727 பயனாளிகளுக்கு ரூ. 3.86 கோடி மதிப்பிலான இணைய வழி பட்டா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 100 பயனாளிகளுக்கு ரூ. 1,01,80,000 மதிப்பில் விலையில்லா இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களை அமைச்சா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிகளில், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT