தாயுமானவா் திட்டத்தின்கீழ் பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 18,787 முதியோா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4) முதல் விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தின் மூலம் ஜனவரி மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜன. 6-ஆம் தேதி வரை பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 65 வயது மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தின் மூலம் பெரம்பலூா் வட்டத்தில் 4,892 பேரும், ஆலத்தூா் வட்டத்தில் 4,053 பேரும், குன்னம் வட்டத்தில் 5,049 பேரும், வேப்பந்தட்டை வட்டத்தில் 4,793 பேரும் என மொத்தம் 18,787 போ் பயனடைந்து வருகின்றனா். எனவே, முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டைதாரா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.