பெரம்பலூா் அருகே வீடுபுகுந்து 37 பவுன் நகைகள் கொள்ளை
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டின் பின்புறக் கதவின் பூட்டை உடைத்து, தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி 37 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டின் பின்புறக் கதவின் பூட்டை உடைத்து, தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி 37 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராம நியாய விலைக்கடை எதிரேயுள்ள இஸ்லாமிய தெருவில் வசிப்பவா் சையது ஜாபா் மனைவி தாராபீ (65). இவரின் 4 மகன்களுக்கும், 3 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூா் மற்றும் உள்ளூரில் தனித்தனியே வசிக்கின்றனா். இவரது இளைய மகள் அஷரப்பீ (29) கணவரைப் பிரிந்து, கடந்த 7 ஆண்டுகளாக தனது தாய் தாராபீயுடன் வசிக்கிறாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தாய், மகள் இருவரும் தூங்கியபோது, வீட்டின் பின்புறக் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 4 போ் தாராபீயையும், அஷரப்பீயையும் கத்தியை காட்டி மிரட்டி, கம்பியால் தாக்கி, பீரோவிலிருந்த 37 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினா்.
இத் தாக்குதலில் மயங்கிக் கிடந்த இருவரும் வெள்ளிக்கிழமை காலை மயக்கம் தெளிந்து எழுந்து மங்களமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.