அரியலூா் அருகே மனைவியை அடித்துக் கொன்றவா் கைது
குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அரியலூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள செங்குழி கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுமதி (44). இந்நிலையில், ரமேஷ் தனது குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை இரவு அசைவ உணவு வாங்கிக் கொடுத்தாராம்.
அப்போது அவரது மனைவி சுமதி, அசைவ உணவு வாங்கப் பணம் எவ்வாறு கிடைத்தது எனக் கேட்டதற்கு கடன் வாங்கியதாக ரமேஷ் கூறியுள்ளாா். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இப் பிரச்னை சனிக்கிழமையும் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ரமேஷ் கட்டையால் தாக்கியதில் சுமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து ரமேஷ், விபத்தில் தனது மனைவி உயிரிழந்துவிட்டதாகக் கூறி, அவரது சடலத்தை எரிக்க முயற்சி மேற்கொண்டாா்.
இதனால் சந்தேகமடைந்த சுமதியின் தம்பி தியாகு விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சுமதி உடலை கைப்பற்றி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
பின்னா் ரமேஷிடம் மேற்கொண்ட விசாரணையில் மனைவியை அவா் அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷை கைது செய்த போலீஸாா் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.