கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்:தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25 சத ஒதுக்கீடு:கண்காணிக்க குழு அமைக்கப்படும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையல்லாத தனியார் சுயநிதிப்பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் கட்டாயக்கல்விச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை குறித்து கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையல்லாத தனியார் சுயநிதிப்பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் கட்டாயக்கல்விச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை குறித்து கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நா. அருள்முருகன் தெரிவித்த தகவல்:
கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் கல்வித்துறை வெளியிட்ட அரசாணையின் படி நலிவுற்ற மாணவர்களுக்கு தனியார் சுயநிதிப்பள்ளிகளில் முகப்பு வகுப்பில் 25 சதவிகித மாணவர்களை சேர்க்கப்பட வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அரசு அறிவித்துள்ள விவரங்களுடன் பூர்த்தி செய்து 9.5.2013 -ம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து தகுதியுள்ள மாணவர்கள், தகுதியற்றவர்கள் குறித்த விவரம் 11.5.2013 -ல் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். இதையடுத்து 14.5.2013 -ம் தேதி காலை 10 மணிக்கு பெற்றோர்கள் முன்னிலையில் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் அன்று பிற்பகல் 2.30 மணியளவில் பள்ளி அறிவிப்புப்பலகையில் ஒட்டப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், தனியார் சுயநிதிப்பள்ளிகளில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம் 25 சதவிகித மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்வது குறித்து மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் ஆய்வு மேற்கொள்வார். மேலும், முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கொண்ட தனி கண்காணிப்புக்குழு அமைத்து கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றார்.