கந்தர்வகோட்டையில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் சனிக்கிழமை ஒருவர் இறந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா பி. அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலுக்கு கந்தர்வகோட்டை வழியாகச் சென்று கொண்டிருந்தனர். வெள்ளிக்கிழமை இரவு தஞ்சாவூர் - புதுகை சாலையில் தாலவாரி பாலம் அருகே நடந்து சென்றபோது புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் சென்ற லாரி அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பி. அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் விஸ்வநாதன் (51),ராமநாதன் (43), தியாகராஜன் (50) ஆகியோர் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் சிகிச்சைப் பலனின்றி விஸ்வநாதன் இறந்தார். லாரி ஓட்டுநரான தருமபுரியைச் சேர்ந்த மாதுவை (40) கந்தர்வகோட்டை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.