கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டடப் பணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கட்டுமானத் தொழிலாளர்கள் வேதனையடைகின்றனர்.
ஆற்று மணல் தட்டுப்பாடு அதிகரித்து, விலையும் அதிகரித்துள்ளது. ஒரு லோடு ஆற்று மணல் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. இந்த விலை ஏற்றம் குறித்து மணல் லாரி உரிமையாளர்கள் கூறுகையில், முன்புபோலன்றி ஒரு லோடு மணல் அள்ளுவதற்கு பத்து நாள்களுக்கும் மேலாக ஆற்றுப் பகுதிகளில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மணலை சேமித்து விற்பனை செய்வர்கள் விலை அதிகரித்து வருகின்றனர்.
இந்த மணல் தட்டுப்பாட்டால் கொத்தனார், சித்தாள், சென்ரிங் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் வேலையின்றி பரிதவிக்கும் நிலையில் உள்ளனர். மணல் தட்டுபாட்டினைப் போக்கி கட்டடப் பணிகள் தொய்வின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படுமா எனத் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.